×

பாகனை தாக்கி கொன்ற யானை மீண்டும் வருகிறதா? திருப்பரங்குன்றம் பக்தர்கள் பீதி

திருப்பரங்குன்றம், பிப்.5: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான பெண் யானை தெய்வானை. 15 வயதான இந்த யானை கடந்த 2015 ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ம் ஆண்டு பாகனின் உதவியாளரை தாக்கியது.  அப்போது யானையை பரிசோதித்த மருத்துவர்கள் காற்றோட்டமான சூழலில் யானையை பராமரிக்க ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து தென்பரங்குன்றத்தில் யானைக்கு 10 லட்ச ரூபாய் செலவில் நீச்சல்குளம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த நீச்சல்குளம் அப்போதைய துணை ஆணையர் பணியிட மாறுதலுக்கு பிறகு பராமரிப்பின்றி மீண்டும் யானை கோயிலுக்குள் நிறுத்தப்பட்டது.

பின்னர்  யானை தனது இரண்டு பாகன்களையும் கடுமையாக தாக்கியது. இதில் ஒருவர் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைத்தொடர்ந்து யானையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் யானைக்கு பயிற்சி பெற்ற பாகன்களை நியமிக்க பரிந்துரைத்தனர். இதனைத்தொடர்ந்து டாப்சிலிப் பகுதியில் இருந்து நன்கு பயிற்சி பெற்று பாகன்கள் நியமிக்கப்பட்டனர். ஒராண்டுக்கு பின் அவர்களுக்கு பதிலாக புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு பராமரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் உதவி பாகனான காளிதாஸை யானை தாக்கியது. இதில் அவர் பலியானர். பின்னர் ஜூன் மாதம்  யானை திருச்சி மாவட்டம் எம்ஆர் பாளையத்தில் உள்ள வனத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் முகாமில் இருந்த உதவி பாகனையும் தாக்கியது. இதனைத்தொடர்ந்து யானை அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் திருச்சி எம்ஆர் பாளையம் முகாமில் இருந்து  லாரி மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. யானைக்கு திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் பூஜை செய்யப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.  

இதுகுறித்து சுப்பிரமணியசுவாமி கோயில் அலுவலர்கள் கூறுகையில்,`` யானை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். ஆனால் யானையை தனியாக தங்க வைக்காமல் மற்ற கோயில் யானையுடன் தங்க வைக்க பரிந்துரைத்துள்ளனர். அதனால் மீனாட்சி அம்மன் கோயில் யானையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு வரும் 8ம் தேதி கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கிருந்து திரும்பிய பின் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மீண்டும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை பராமரிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Tags : Bagan ,devotees ,Thiruparankundram ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...