×

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணிகள் முடக்கம்: ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் ஊராட்சி ஒன்றியம் நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணிகள் கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றம் சாட்டினர். ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. அப்போது, ‘திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓர் ஆண்டாக நிதி நெருக்கடியால் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.

இதனால், கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளும் செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை’ என்று குற்றம் சாட்டினர். மேலும், நிதி பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரே நேரத்தில் நிதி நெருக்கடி குறித்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியாக வளர்ச்சி பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு காரணமாக செலவீனத்திற்கு மட்டும் மன்றத்தில் ஒப்புதல் அளிக்க மன்ற கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : crisis ,councilors ,Union ,
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...