கண்ணமங்கலம், பிப்.4: கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சமீபமாக வலம் வரும் மயில் கூட்டம் பக்தர்களுடன் பழகுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை உச்சியில் உள்ள கோயில் வரை வாகனங்கள் செல்ல வசதியாக உள்ளதாலும், இக்கோயிலில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறுகிறது என்பதாலும் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் பெருகி வருகிறது. விழாக்காலங்கள் மட்டுமின்றி தினசரி பக்தர்கள் வருவதால் சுற்றுலா தலம் போல் கோயில் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், சமீப காலமாக இக்கோயில் வளாகத்தில் வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. மூலவர் சன்னதி, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவன் சன்னதிகளில் மயில்கள் வலம் வருகின்றன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களோடு சேர்ந்து எந்த பயமும் இல்லாமல் இயல்பாகவும், சுதந்திரமாகவும் மயில்கள் சுற்றி வருவதும், கோயிலில் வளரும் சேவல்களுடன் நண்பர்களை போல் பழகுவதும் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது. முருகப்பெருமானின் வாகனமான மயிலையும், கொடியில் உள்ள சேவலையும் படத்தில் நெருக்கமாக பார்த்து வந்த நிலையில், இங்கு தினசரி கண் முன் காணும்போது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.