×

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை துணை ராணுவ வீரர் கைது

வேலூர், பிப்.4: ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை ராணுவ வீரரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பைஞ்சுகுட்டப்பா(32). இவர் ஆந்திராவில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அதே பெட்டியில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கைக்காக பெற்றோருடன் 19 வயது மாணவியும் பயணம் செய்தார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில், ஜோலார்பேட்டையை கடந்து ரயில் வந்து கொண்டிருந்தபோது மாணவிக்கு, பைஞ்சுகுட்டப்பா பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டார். உடனே மாணவியை மீட்ட சக பயணிகள், ராணுவ வீரருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதற்குள் ரயில் வாணியம்பாடியை கடந்து விட்டது. பின்னர் ராணுவ வீரர் பைஞ்சுகுட்டப்பாவை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மாணவி காட்பாடி ரயில்வே போலீசில் நேற்று புகார் அளித்தார். ஆனால் சம்பவம் நடந்த பகுதி ஜோலார்பேட்டை என்பதால், புகாரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் சபரிநாத் வழக்குப்பதிவு செய்து பைஞ்சுகுட்டப்பாவை கைது செய்தார். தொடர்ந்து திருப்பத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : soldier ,student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...