×

சேந்தமங்கலத்தில் பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கும்பல் கைது

சேந்தமங்கலம், பிப்.4: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்துள்ள மின்னாபள்ளியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சங்கேஷ்வரன் மனைவி பிரியங்கா(23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உடல்நிலை சரியில்லாத தனது குழந்தையை, டூவீலரில் சேந்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சாலையை கடக்க ஓரமாக நின்றிருந்த போது, எதிரே நடந்து வந்த மர்மநபர், பிரியங்கா அணிந்திருந்த இருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதை கேட்டு, அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து, செயின் பறித்த நபரை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.சேந்தமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த நசீர் மகன் கனி (23), பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் என்பது தெரியவந்தது. காரில் வந்த 4 பேர் கும்பல், கனியை செயின் பறிக்க அனுப்பி விட்டு, பெட்ரோல் பங்க்கில் காத்திருந்ததும், பொதுமக்களிடம் அவர் சிக்கிக்கொண்டதால், காரில் தப்பியோடியதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று கலப்பநாயக்கன்பட்டி அடுத்த திருமலைபட்டி பிரிவு பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காரை துரத்தி பிடித்த போலீசார், காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த காசிம்ராஜா(26), திருப்பத்தூர் ராஜேந்திரகுமார்(40), வாணியம்பாடி சுதாகர்(41) ஆகியோரிடம் விசாரித்த போது, பிரியங்காவிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.

Tags : Chentamangalam ,
× RELATED சேந்தமங்கலம் அருகே துணிகரம் அடகு கடை...