கிருஷ்ணகிரி, பிப்.4: பர்கூர் ஒன்றியம், வரட்டனப்பள்ளி கிராமத்தில் நேற்று 53ம் ஆண்டு எருது விடும் விழா, காலை 8 மணிக்கு தொடங்கி, மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது. விழாவிற்கு ஊர் நாயுடு, ஊர் செட்டியார் தலைமை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடி கடப்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்ததோ அதன் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி, 40 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசாக ₹6 லட்சம் வழங்கப்பட்டது. எருதாட்டத்தை காண வரட்டனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர். இதில் காளைகளின் கயிறு இழுத்தும், காளைகள் முட்டியும் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எருதாட்டத்தையொட்டி, கந்திகுப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.