பாலக்கோடு, பிப்.4: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டி அள்ளியில் நேற்று எருதாட்டம் நடந்தது. இதில் மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சி.எம்.புதூர், எம்.செட்டி அள்ளி, சாமனூர், கௌரவாண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், ராயக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. விழாவை காண பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, காளைகள் மோதியதில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எருதாட்ட விழாவையொட்டி, மாரண்டஅள்ளி போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.