×

எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

திருப்பூர், பிப். 4:  திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார பாத்திரத் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவது தொடர்பாக எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இவற்றில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

அதனால், கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கத்தை கேட்பது என முடிவு செய்யப்பட்டு, கடந்த 13ம் தேதி உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பாக எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவிகிதம், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதம், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஜன.27ம் தேதி நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில், பாத்திர உற்பத்தியாளர்கள் தரப்பில் 4 சதவீதம் மட்டுமே உயர்வு தரப்படும் என கூறியதால், தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இப்பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் முழுக்கூலி பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், ராயப்பன், குமாரசாமி, ராஜேந்திரன், துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டி.யு சங்க நிர்வாகிகள் ரங்கராஜ், குப்புசாமி, ஏ.டி.பி நிர்வாகிகள் தேவராஜ், பாலசுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் செல்வராஜ், நாகராஜ், எல்.பி.எப். நிர்வாகிகள் வேலுச்சாமி, தர்மலிங்கம், எச்.எம்.எஸ் நிர்வாகிகள் திருஞானம், பாண்டியராஜ், ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் ஈஸ்வரன், அசோக், காமாட்சியம்மன் சங்க நிர்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், அர்ச்சுனன், பி.எம்.எஸ் நிர்வாகிகள் சீனிவாசன், லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் பாத்திர உற்பத்தியாளர்கள் தரப்பில் ஏற்கனவே தருவதாக கூறப்பட்ட 4 சதவிகிதத்துடன் மேலும் 1 சதவீதம் சேர்த்து 5 சதவீதம் உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 29ம் தேதி நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று (4ம் தேதி) 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Tags : Eversilver ,phase negotiations ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சு