×

காதலியை பிரித்து விடுவார்கள் என்ற பயம்: போலீசார் கண்முன் பிளேடால் அறுத்துக் கொண்ட காதலன்: காவல் நிலையத்தில் பரபரப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் நிஷா (20). கடந்த சில நாட்களுக்கு முன் நிஷா திடீரென மாயமானார். அவரை, பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (25) என்ற வாலிபரை காதலித்து அவருடன் நிஷா சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், திருநெல்வேலியில் இருந்த அவர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். நேற்று காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித், தன்னிடம் இருந்து காதலியை போலீசார் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில், திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை  அறுத்துக்கொண்டார். அவருக்கு ரத்தம் வழிந்தோடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவருக்கு மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில், சில ஆண்டுகளாக காதலித்து, கடந்த சில மாதங்களுக்குமுன் பதிவு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

நிஷாவுக்கு, பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலனுடன் வாழ விரும்புவதாக கூறினார். இதையடுத்து, இருவரையும் பாதுகாப்புடன் போலீசாரின் வாகனத்திலேயே அனுப்பிவைத்தனர். விசாரணையின்போது, காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே காதலன் பிளேடால் தன்னைத்தானே கையை அறுத்து கொண்ட சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : police station ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...