உடன்குடி, பிப். 3: போலி மத சார்பற்ற கட்சிகளின் பாஜ எதிர்ப்பு வெறுப்பு பிரசாரத்தை மக்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என வேலூர் இப்ராகிம் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சார்பில் உடன்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத நல்லிணக்க பிரசார கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரவை தலைவர் வேலூர் இப்ராகிம் வருகை தந்தார். கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பாஜ தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன்ஆதித்தன், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் அழகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் முன்னிலை வகித்தனர்.
இதனிடையே பிரசாரத்திற்கு போலீசார் அனுமதிமறுத்த நிலையில் இதையடுத்து இக்கூட்டம் உடன்குடி பாஜ அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரவை தலைவர் வேலூர் இப்ராகிம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உண்மையான மத நல்லிணக்கத்தைப் பேணும் கட்சி பாஜ மட்டுமே. சிறுபான்மையினரைப் பாதுகாப்போம் எனக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள் எதுவும் செய்யவில்லை. எனவே, போலி மத சார்பற்ற கட்சிகளின் பாஜ எதிர்ப்பு வெறுப்பு பிரசாரத்தை மக்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்களால் நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதையொட்டி திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.