கிருஷ்ணகிரி, பிப்.3: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணபவன், பாரி, திருநாவுக்கரசு, மாவட்ட இணை செயலாளர்கள் வெங்கடேசா, கெம்பண்ணா, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ₹3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட இணை செயலாளர் கலைவாணி நன்றி கூறினார்.