நாகை, பிப். 3: அரசு துறையில் காலியாக உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா ஆகியோர் பேசினர். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜிபிஎப் வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து 40 பெண்கள் உட்பட 60 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். பின்னர் நாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திடீரென மாவட்ட தலைவர் இளவரசன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.