கரூர், பிப். 3: பிரசவத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி அடுத்த களத்தூரைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மனைவி கவிதா(22). இரண்டாவது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த ஆம்புலன்ஸ் புலியூர் அருகே நேற்று காலை வந்து கொண்டிருந்தபோது, கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக, ஆம்புலன்சிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் சண்முகம், பைலட் லோகேஷ் ஆகியோர் கவிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.