திருப்புவனம்,பிப்.3: திருப்புவனம் வட்டாரத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையையேற்று நேற்று கொள்முதல் மையம் செயல் படத்துவங்கியது.திருப்புவனம் வட்டாரத்தில் சுமார் 4 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. என்எல்ஆர், கர்நாடக பொன்னி, கல்சர் பொன்னி, கோ 50 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட தொடங்கும், தொடர் மழை காரணமாக அறுவடை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நெல் கொள்முதல் மையங்கள் பொங்கல் கழித்து தொடங்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் நெல் கொள்முதல் மையத்திற்கு என பேரூராட்சி சார்பில் கடந்த 2010ம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. திருப்புவனத்தை சுற்றியுள்ள 30 கிராம விவசாயிகள் இந்த மையம் மூலம் பயனடைகின்றனர்.
இந்தாண்டு கொள்முதல் செய்ய இயந்திரம், 10 ஆயிரம் சாக்குகள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக மின் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருந்தனர். நேற்று பேரூராட்சி அலுவலர்கள் மின்வாரிய ஊழியர்கள் பழுது பார்த்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். கிலோ ரூ.19.58 காசுக்கு கொள்முதல் செய்யப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.