×

கடனை திரும்ப கொடுக்காததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர், பிப். 3: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் சிட்கோ வெள்ளக்கரடை சேர்ந்தவர் தண்டபாணி.இவரது மனைவி பாக்யலட்சுமி (50). சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசெல்வம் (46). இவர் பனியன்  நிறுவனத்தில் டிரைவாக பணிபுரிந்து வந்தார். பாக்யலட்சுமிக்கும், பழனிசெல்வத்துக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்த நிலையில் பாக்யலட்சுமி கடனாக வாங்கிய பணத்தை பழனிசெல்வத்திற்கு கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பாக்யலட்சுமி வீட்டிலிருந்து பனியன் நிறுவனம் சென்றார். சிட்கோ ரவுண்டானா அருகே வந்த பழனிசெல்வம் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து பாக்யலட்சுமியிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கோபத்தில் பழனிசெல்வம் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்யலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் பாக்யலட்சுமிக்கு வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் பழனிசெல்வத்தை கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...