டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே சில முக்கிய பிரச்சனைகளை எழுப்ப விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கேவின் கருத்துகளை கேட்ட பிறகு, பிரதமர் மோடி உரையை தொடங்கி இருக்கலாம். பிரதமருக்கு உள்ள முக்கியத்துவம் எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கிறது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். பாஜக ஆட்சி பணக்காரர்களுக்கானது; ஏழைகளுக்காக எந்த திட்டங்களும் இல்லை.
அதானி, அம்பானி போன்றவர்களுக்கு நிலங்களையும், திட்டங்களையும் வாரி வழங்குகின்றனர். அவதூறுகளை வாரி வீசுவது ஆளும்கட்சியினர்தான்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல. பிரதமரை பெண் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டனர் என ஒருவர் எப்படி அனுமானித்து கூற முடியும்? நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கானதாக மாறி விட்டது; எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு பதில் சொல்லும் தன்மை ஆளும்கட்சியினரிடம் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதிலளிப்பது இல்லை.
நாடாளுமன்றத்தை மதிக்காமல் ஆளும் பாஜக அரசு தங்கள் விருப்பம் போல செயல்படுகிறது. ஆளும் கட்சியினர் பேசுவதை கேட்டு தலையாட்டுவது எங்கள் வேலை அல்ல. நாடாளுமன்ற விதிகளையும் மதிப்பதில்லை; எங்கள் குரலையும் ஒன்றிய அரசு கேட்பது இல்லை. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளை கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை. நாங்கள் எங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவிக்க முயன்றோம்; ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
