ஈரோடு, பிப். 3: பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பெருந்துறை டி.எஸ்பி. அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், உண்மைக்கு மாறான வகையில் அவரது அரசியல் நிலைப்பாடுகள் பற்றி பொய்யான தகவல்களை போலியான புனைப்பெயரில் வாட்ஸ்அப் மூலமாக சிலர் பதிவிட்டிருக்கிறார்கள். எவ்வித ஆதாரமும் இல்லாமல், தவறான பதிவை வெளியிட்டுள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.