ஈரோடு, பிப். 3: ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் (த.மு.மு.க.) நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது லரீப் முன்னிலை வகித்தார். முகமது நபி குறித்து இழிவாக பேசி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பா.ஜ. நிர்வாகிகள் கல்யாண ராமன், வேலூர் இப்ராகிம் போன்றவர்களை கண்டித்தும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக த.மு.மு.க. வினர் 60 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.