ஊத்தங்கரை, பிப்.2: ஊத்தங்கரை அருகே தேங்காய் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் எரிந்து நாசமானது. ஊத்தங்கரையில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து டெல்லி, கல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி தேங்காய் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை அதன் உரிமையாளர் சயின்ஷாவிற்கு குடோன் தீ பிடித்து எரிவதாக அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, குடோனுக்கு சென்ற அவர் உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் எரிந்து நாசனமானது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.