ஈரோடு, பிப். 2: ஆசனூரில் மது அருந்த அனுமதித்த 6 காட்டேஜ்ஜை சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் என 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதி கர்நாடகா எல்லைப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான காட்டேஜ்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக எஸ்பி. தங்கதுரைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து காட்டேஜ்களில் திடீர் சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், ஆசனூர் போலீசார், ஆசனூரில் உள்ள அனைத்து காட்டேஜ்களிலும் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அரேப்பாளையம், பழைய ஆசனூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த 6 காட்டேஜ்களில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக காட்டேஜ் நிர்வாகிகள், ஊழியர்களான மயில்ராஜ் (37), தங்கராஜ் (58), சிவசாமி (27), குமார் (45), நடராஜ் (40), ரங்கசாமி (38) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.