தொண்டாமுத்தூர்: ஒன்றிய அரசிடம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே நமக்கு தருவதைப் பற்றி எடப்பாடி கேள்வி எழுப்புவாரா? என்று செந்தில் பாலாஜி கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: நிதி இல்லாமல் எந்த திட்டங்களும் துவங்கப்படுவதில்லை. தமிழகத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடியாக முதல்வர் சென்று அதனை ஆய்வு செய்து நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் துவங்கப்படுகிறது. அந்த திட்ட பணிகளையும் முதல்வரே ஆய்வு செய்து வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே நமக்கு தருவதைப் பற்றி கேள்வி எழுப்புவாரா? நிதியை சேர்த்து தர வேண்டும் என்று கேட்பாரா?. 2014ம் ஆண்டு திமுக காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் தற்போது 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுவது குறித்து ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்புவரா?. இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அமைய வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தது குறித்து கேள்விக்கு, ‘‘வானதி சீனிவாசன் முதலில் மணிப்பூர் சென்றாரா இல்லையா என தெரியவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக திமுக உள்ளது’’ என்றார்.
