×

108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம் 3ம் தேதி தொடக்கம்: 12ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பிரம்மேற்சவம் நடக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் வரும் 1ம் தேதி இரவு 9 மணியளவில் புஷ்ப பல்லக்குடன் விழா தொடங்க உள்ளது.

3ம் தேதி காலை 5 மணியளவில் துவஜாரோகணம் விழா நடைபெறுகிறது. இரவு புன்னை மர வாகனத்தில் உலா நடக்கிறது. 4ம் தேதி காலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், இரவு 7.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும் உலா நடக்கிறது.  5ம் தேதி காலை 5.30 மணியளவில் கருட சேவையும், காலை 11 மணியளவில் ஏகாந்த சேவையும், இரவு 7.30 மணியளவில் அம்ச வாகன உலாவும் நடைபெறுகிறது. 6ம் தேதி காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை, இரவு 7.30 மணிக்கு சந்திர பிரபை, 7ம் தேதி நாச்சியார் திருக்கோலம், இரவு 7.30 மணியளவில் அனுமந்த வாகன உலா நடக்கிறது.

8ம் தேதி காலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. காலை 6.30 மணியளவில் ஆனந்த வாகனம், இரவு 7.30 யானை வாகனத்தில் உலா நடக்கிறது. 9ம் தேதி  காலை 4 மணி முதல் 4.40 மணி வரை திருத்தேரில் எழுந்தருளல், காலை 7 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 10ம் தேதி காலை 6.30 மணிக்கு வெண்ணெய்தாழி கண்ணன் கோலம், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனம், 11ம் தேதி காலை 6.30 மணிக்கு ஆளும் பல்லக்கு, 11 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 12ம் தேதி காலை 6.30 மணிக்கு துவாதச ஆராதனம், இரவு 10 மணியளவில் சப்தவர்ணம் நடக்கிறது. இதில், சிறிய தேரில் சுவாமி வீதியுலா வருகிறார். தொடர்ந்து 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thiruvallikkeni Parthasarathy Temple Prom ,
× RELATED 108 வைணவ தலங்களில் ஒன்றான...