சிவகங்கை, ஜன.30: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் சிபிஎஸ்(புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பங்களை ஆதரவற்றவர்களாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய இப்போராட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருணகிரி வரவேற்றார். தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சங்கரசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், அழகேசன், லூயிஸ்ஜோசப் பிரகாஷ், கார்த்திக் வாழ்த்தி பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நிறைவுரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் நன்றி கூறினார்.