சாயல்குடி, ஜன.30: கடலாடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். ஆணையாளர் அன்புக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவணுபூவன் வரவேற்றார். கூட்டத்தில் கடுகுசந்தை கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ‘‘கடலாடியிலிருந்து மீனங்குடி, சாத்தங்குடி வழித்தடத்தில் மேலச்செல்வனூர் வழியாக ராமநாதபுரத்திற்கு நேரடியாக பஸ் இயக்க வேண்டும் என்றார். சிக்கல் கவுன்சிலர் அம்மாவாசி பேசுகையில், ‘‘சிக்கல் மேற்கு காலனி, பள்ளிவாசல் தெரு, தொட்டியாப்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து கிடக்கிறது. பள்ளி மாணவர்கள், தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும்’’ என்றார்.
ஏர்வாடி கவுன்சிலர் பிச்சை பேசுகையில், ‘‘ஏர்வாடி கல்பார் பகுதியில் உள்ள 25 குடியிருப்பு வீடுகளை 20 நாட்களாக மழை நீர் சூழ்ந்து கிடக்கிறது. தண்ணீரை வெளியேற்றி, நிரந்தரமாக மண் அடித்து உயர்த்தி சாலை அமைக்க வேண்டும்’’ என்றார். ஆ.புனவாசல் கவுன்சிலர் மாயக்கிருஷ்ணன் பேசுகையில், ‘‘தொடர் கனமழையால் கடலாடி ஒன்றியத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்குரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் கவுன்சிலர் முனியசாமிபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.