×

செய்யாற்றில் சிவபெருமான் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் தரிசனம் தைப்பூசத்தை முன்னிட்டு

செய்யாறு, ஜன.30: தைப்பூசத்தை முன்னிட்டு 19 சிவன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளுக்கு செய்யாற்றில் தீர்த்தவாரி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கல் கிராமம் செய்யாற்றங்கரையில், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடப்பது வழக்கம். அதன்படி, தைப்பூச தினமான நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் உக்கல், ஆக்கூர், கீழ்ப்பாக்கம், தண்டரை, தேத்துறை, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், அத்தி, கூழமந்தல், மகாஜனம்பாக்கம், வெள்ளாமலை, மடிப்பாக்கம் மற்றும் உத்திரமேரூர் தாலுகா வெங்கடாபுரம், மேல்பாக்கம், இளநகர், சேத்துப்பட்டு, மானாமதி, பெருநகர் உள்ளிட்ட 19 கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் செய்யாற்றங்கரையில் எழுந்தருளினர்.

அப்போது, உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி முடிந்ததும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. இதில் 19 கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர், வாணவேடிக்கையுடன் அந்தந்த கிராமத்திற்கு சுவாமி சென்றதும், கிராமங்களில் வீதிஉலா நடந்தது.

Tags : procession ,devotees ,Lord Shiva ,
× RELATED மானாமதுரையில் சோமநாதர் கோயில் தேரோட்டம்