வேலூர், ஜன.30: 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வேலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் வழங்கினர்.கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவும், அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் கேட்டு வருகிறது. இதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்க, தாசில்தார்கள் என அதிகாரிகள் மட்டத்தில் ஊர்வலமாக சென்று மனுக்களை வழங்கி வந்தனர்.இதையடுத்து மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்படும் என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன்பு பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன், மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் கு.வெங்கடேசன், ஜி.கே.ரவி, மாவட்ட அமைப்பு செயலாளர் அக்னி வேல்முருகன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், சசிகுமார், புருஷோத்தமன், சுகன்யா ஜெயராமன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரஞ்சன், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அன்பரசன், ஜெயமுருகன், சீவூர் துரைசாமி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன், மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம் மற்றும் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் சண்முகசுந்தரத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.