×

மநீம சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி ரூ.10 லட்சம் ரொக்க பரிசு

 திருச்சி, ஜன.29: மக்கள் நீதிமய்யம் சார்பில் “நான் எம்எல்ஏ ஆனால்” எனும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது. இது குறித்து மநீம திருச்சி பொதுச்செயலாளரும், அமைப்பு, சார்பு அணிகளின் தலைவருமான முருகானந்தம் தெரிவித்ததாவது: பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், “நான் எம்எல்ஏ ஆனால்” எனும் தலைப்பில் உங்கள் தொகுதி மேம்பாடு பற்றிய உங்களின் சிந்தனைகளை 5 நிமிடத்திற்கு மிகாமல் பேசிய வீடியோவை 63698 77777 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். கட்டுரை போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் ஏ4 பேப்பரில் 6 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, திருச்சி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள மக்கள் நீதி மய்ய 3ம் தலைமையகத்தில் தபால்(அ)நேரிலோ சமர்ப்பிக்கலாம். அத்துடன் உங்களது ஆதார் கார்டு (அ) வாக்காளர் அட்டையின் நகலை இணைத்திருக்க வேண்டும். படைப்புகளை கடைசி நாளான வரும் பிப். 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பேச்சுப்போட்டிக்கு ரூ.5 லட்சம், கட்டுரைப்போட்டிக்கு ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...