×

முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தில் ராஜேஸ்குமார் பங்கேற்பு

நாமக்கல், ஜன.29:  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில், தைப்பூச திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மோகனூர் காந்தமலை அடிவாரத்தில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. மலையை சுற்றியுள்ள பாதையில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். பெண்கள் தேங்காய், பழம் வைத்து முருகப் பெருமானை வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், எருமப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாலசுப்ரமணியம், ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள்மொழிராஜா, எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் (பொ) லோகநாதன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags : Rajeskumar ,festival ,temples ,Murugan ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா