தேன்கனிக்கோட்டை, ஜன.29: கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளியில் நடந்த எருது விடும் விழாவில் 300 மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடத்தி, பொங்கல் விழாவை நிறைவு செய்வது வழக்கம். அதன்படி, நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. எச்.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த காளைகள் மட்டுமின்றி கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி மற்றும் ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளைகளை கொண்டு வந்திருந்தனர். காலை முதல் மாலை வரை, ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 300 காளைகளை அவிழ்த்து விட்டனர். மேலும், எருதாட்டத்தை காண சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தை கண்டு காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. குறிப்பிட்ட இலக்கினை விரைந்து கடந்த காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.