×

பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது

திருப்பூர், ஜன.29:  திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவத்தில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், போயம்பாளையத்தை அடுத்த சக்திநகரில் பிறந்தநாள் விழாவின்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரங்களில் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டி பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்பகுதி பொதுமக்களும் இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சக்தி நகரை சேர்ந்த சதீஷ் (25) தனது பிறந்தநாளை நண்பர்களான ஜான்சன் (27), முகிலன், மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடியதும், பட்டா கத்தியால் சதீஷ் கேக் வெட்டியதும் தெரியவந்தது. இது குறித்து 4 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜான்சன் கைதானார். தலைமறைவாக உள்ள சதீஷ், முகிலன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான போட்டிகளில்...