அருப்புக்கோட்டை, ஜன. 28: அருப்புக்கோட்டையில் நகர திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகிக்க, நகர மாணவரணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணி வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தகுதி திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது. அதிமுகவிற்கு இல்லை. காலண்டரில் தேதி கிழிக்க, கிழக்க அதிமுக ஆட்சியின் ஆயுள் குறைந்து கொண்டே போகிறது.
ஆனால் திமுகவிற்கு ஆயுள் கூடி கொண்டே போகிறது. முதல்வர் பழனிச்சாமியே திமுக ஆட்சிக்கு வந்து திட்டங்களை நிறைவேற்றட்டும் என வாய்தவறி கூறி விட்டார். அதுதான் உண்மை. மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். அருப்புக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கு அனுமதி வாங்க 3 ஆண்டுகள் அலைந்துள்ளேன். அறிவிப்பு அவர்களுடையது. உழைப்பு என்னுடையது. வடமாநில இளைஞர்கள் ரயில்வே, தபால் துறை வேலைகளில் அதிகம் சேர்க்கப்படுகின்றனர். இதை மாற்ற திமுக ஆட்சிக்கு வர வேண்டும்’ என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர அவை தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.