விருதுநகர், ஜன. 28: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்த மேனன்ஹாசன் (23), கல்லூரி மாணவரான இவர் கடந்த ஜன.1ல் சோப்பூரில் இருந்து சைக்கிளில் பயணத்தை துவங்கி உள்ளார். 4 ஆயிரம் கிமீ தூரத்தை 27 நாட்களில் பயணித்து நேற்று கன்னியாகுமரி சென்றடைந்தார். வழியில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்த மேனன்ஹாசன் கூறுகையில், ‘11 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரம் கிமீ தூரத்தை தினசரி காலை 7 மணி துவங்கி இரவு 10 மணி வரையில் 150 முதல் 200 கி.மீ தூரம் வரை பயணித்து கடந்தேன். கொரோனா தொற்று பரவலால் வீடுகளில் முடங்கி கிடக்கும் இளைஞர்கள் வெளிவந்து உடல் ஆரோக்கியம், மன அழுத்தத்தை தவிர்க்க திறன் மேம்பாட்டு பயிற்சி பெற வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொண்டேன்’ என்றார். மேனன்ஹாசனை என்சிசி அதிகாரி கதிரேசன், போலீசார் வரவேற்றனர்.