×

பிள்ளைப்பிணி பார்க்க வந்தது போல் நடித்து ஆறுமுகநேரியில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு மொபட்டில் வந்த வாலிபர்களுக்கு வலை

ஆறுமுகநேரி, ஜன.28:  ஆறுமுகநேரியில் பிள்ளைப்பிணி பார்க்க வந்தது போல் நடித்து மூதாட்டியில் 11 பவுன் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேலன். இவரது மனைவி  பால்கனியம்மாள்(83). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்திவேலன் இறந்துவிட்டார். இதனால் பால்கனியம்மாள் தனியாக வசித்து வருகிறார். அருகில் மகன் சரவணன் வசிக்கிறார். பால்கனியம்மாள் சிறு குழந்தைகளுக்கு பிள்ளைப்பிணி பார்த்து வந்தார். நேற்று காலை 7.30 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள் மொபட்டில் வீட்டிற்கு வந்து, பால்கனியம்மாளிடம் குழந்தைகளுக்கு பிள்ளைப்பிணி பார்ப்பீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், தேவையான பொருட்களை வாங்கி வரக்கூறினார். குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, வீட்டில் இருந்து அழைத்து வருவதாக கூறி, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க செல்லும் போது பின்புறமாக அவர் அணிந்திருந்த 11பவுன் நகையை இழுத்து பறித்தனர்.

இதில் நிலைகுலைந்து விழுந்த பால்கனியம்மாள் கூச்சலிடவே, இருவரும் மொபட்டில் தப்பி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இதுகுறித்து பால்கனியம்மாள், ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ சதீஷ் நாராயணன் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார். தகவலறிந்த திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹரிஸ்சிங் நேரில் சென்று மூதாட்டியிடம் விசாரித்து வாலிபர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்துக் கொண்டார். பின்னர் அவர், விரைவில் குற்றவாளிகளை பிடித்து நகைகள் மீட்கப்படும் என்றார்.


Tags : teenagers ,Arumuganeri ,
× RELATED குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு