×

கோவில்பட்டியில் பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி

கோவில்பட்டி, ஜன. 28: கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் அஜித்குமார் (30). இவர் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார்.
இவர் விடுமுறையில் நண்பரை பார்க்க பைக்கில் சிவகாசி சென்றார். அப்போது ஊரில் தாத்தா இறந்த செய்தி அறிந்து பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நேற்று மதுரை - நெல்லை நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், எஸ்ஐக்கள் ஆர்தர் ஜஸ்டின், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அஜித்குமார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அஜித்குமாருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அஜித்குமாரின் தந்தை ஐயப்பன் நாகர்கோவில் டி.எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Tags : Policeman ,bike accident ,Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா