×

வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி

வேப்பூர், ஜன.27: வேப்பூர் அருகே 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மல்லிகா தம்பதியின் மகன் விவேகன் (3). இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மணிமேகலை தம்பதியின் இரட்டை குழந்தைகள் விக்னேஷ், சர்வேஷ் (3). மல்லிகா, மணிமேகலை இருவரும் சகோதரிகள். கடந்த சில நாட்களுக்கு முன் தனது தங்கை மல்லிகா வீட்டிற்கு மணிமேகலை தன் குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ், சர்வேஷ், விவேகன் ஆகிய 3 குழந்தைகளையும் நீண்ட நேரமாகியும் காணவில்லை. பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெற்றோர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 புகாரை அடுத்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கிராமம் முழுவதும் குழந்தைகளை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டின் அருகில் உள்ள சின்னேரி குளத்தின் கரையில் சிறுவர்கள் கால்தடம் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் இரவு 9 மணியளவில் குளத்தில் இறங்கி தேடுதல் பணியை தொடங்கினர்.நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷ், சர்வேஷ் ஆகிய இரு சிறுவர்களும் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

 இதைதொடர்ந்து சிறுவன் விவேகனை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் அதிகாலை இரண்டு மணி வரை தொடர்ந்து  தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை.  மேலும் குழந்தையை மீட்க நள்ளிரவே கடலூரிலிருந்து பேரிடர் மீட்புக் குழு வர வழைக்கப்பட்டது. நேற்று காலை 7 மணியளவில் பேரிடர் மீட்பு குழுவினர் குளத்தில் இறங்கி படகு மூலம் தேட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் குளத்தின் கரையில் குழந்தை விவேகனின் உடல் சடலமாக மிதந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த இளைஞர்கள் குழந்தையின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் உடலையும் வேப்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ், சர்வேஷ், விவேகன் ஆகிய 3 குழந்தைகளும் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : boys ,Veppur ,pool ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு