×

சிறந்த சேவைக்காக மஞ்சூர் ஜீப் டிரைவருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் வழங்கினார்

மஞ்சூர், ஜன.27: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டிமட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (எ) சின்னவர் (35). இவரது தந்தை ராஜூ, தாய் லட்சுமி. சின்னவர் சொந்தமாக சொகுசு கார் வைத்து மஞ்சூர் பகுதியில் வாடகைக்கு இயக்கி வருகிறார். பொது சேவைகளில் நாட்டம் கொண்ட சின்னவர் டிரைவர் பணியுடன் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தனது சமூக பணிகளால் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் ஏராளமான மரங்கள் ரோட்டில் விழுந்தது. அப்போது சீரமைப்பு பணிக்காக சென்ற மஞ்சூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஜெயராமன் என்பவர் மீது ராட்சத மரம் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது சம்பவ இடத்தில் இருந்த சின்னவர் விரைந்து செயல்பட்டு காவலர் ஜெயராமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதன் மூலம் காவலர் ஜெயராமனுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடிந்தது. இதன் மூலம் போலீசாரின் பாராட்டுகளையும் டிரைவர் சின்னவர் பெற்றார். இதன் மூலம் சிறந்த சேவைக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கத்துக்கு சின்னவர் பரிந்துரை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் சின்னவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். அண்ணா விருது பெற்ற சின்னவருக்கு மஞ்சூர் பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Tags : Chief Minister ,Anna Medal ,Manjur Jeep Driver ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...