சாயல்குடி, ஜன.26: முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அரசு சார்பில் புறக்கடை திட்டத்தின் கீழ் இலவச ஆடுகள் வழங்குவதற்காக 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எட்டையாபுரம், ரெட்டியாபட்டி சந்தைகளில் ஆடுகள் வாங்கப்பட்டது. விவசாயி ஒருவருக்கு ஒரு கிடாய், 11 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. இந்த ஆடுகள் வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் திடீரென இறந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பனேந்தல் விவசாயிஒருவர் கூறும்போது, புறக் கடை திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஏஜென்ட் மூலம் ஆடுகள் வாங்கி தரப்பட்டது. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் இங்கு சரிவர இரையை திண்ணவில்லை, தற்போது மழை பெய்து, பச்சை புற்கள் அதிகமாக உள்ளது. ஆனால் இயற்கை உணவுகளை திண்ணாமல் இருந்தது. இந்நிலையில் ஆடுகள் திடீரென இறந்து வருகிறது. கால்நடை மருத்துவர்களுக்கு
தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சையளிக்க வரவில்லை, இறந்த ஆடுகளை புகைப்படம் எடுத்து விட்டு புதைக்க அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில் மேலும் ஆடுகள் இறக்கும் தருவாயில் உள்ளது. எனவே கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ பரிசோதனை முகாம் அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும். இறக்கும் ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.