×

பேனர் வைப்பதில் தகராறு குறிஞ்சிப்பாடியில் பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை 7 பேர் கும்பலுக்கு வலை

நெய்வேலி, ஜன. 26: குறிஞ்சிப்பாடியில் பேனர் வைக்கும் தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் பட்டதாரி வாலிபர் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் தமிழரசன் (23). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவருக்கும், குறிஞ்சிப்பாடியை அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த வெட்டு (எ) ராகுல் (23) என்பவருக்கும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழரசனின் நண்பர் மணிகண்டனின் தங்கை திருமணம் நடந்தது. இதற்காக பெண் அழைப்பு நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் தமிழரசன், ராகுல் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண மண்டபத்தில் பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த தகராறின் போது ராகுல் தாக்கப்பட்டார். இதனால் அவர் தனது ஊருக்கு சென்று தனது நண்பர்களை அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் அருகே இரவு 11 மணியளவில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ராகுல், அவரது நண்பர்கள் அரிவாளால் தமிழரசனை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த தமிழரசனை, அவரது நண்பர்கள் பைக்கில் ஏற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தமிழரசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ராகுல் உள்பட 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலை நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் அனைத்தும் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அந்த கேமராவின் காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலை செய்யப்பட்ட தமிழரசனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.பேனர் வைக்கும் தகராறில் பட்டதாரி வாலிபர் 7 பேர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dispute ,Kurinjipadi ,gang gang ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...