×

போரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை

பூந்தமல்லி: மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் போரூர் அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று மாலை கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் திடீரென உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் கட்டணம் வசூலிக்கும் பூத்களை அடித்து நொறுக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் 4 பூத்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுங்கின. 3 ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில் கடந்த 19ம் தேதி தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த பாபு(31) கோயம்பேட்டிற்கு காரில் சென்று திரும்பியபோது தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் என கூறி கட்டணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும், ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரது செல்போனை பறித்துக் கொண்டு சில மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டு கொடுத்ததாகவும், செல்போன் பின்பக்கம் கவரில் வைத்திருந்த 4500 ரூபாயை எடுத்துக்கொண்டு திருப்பி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் காரணமாக சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைகளில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடி இருந்ததாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இது குறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலால் போரூர் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Assamese ,
× RELATED அசாம் மக்கள் நிலங்களை...