×

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்

பொள்ளாச்சி, ஜன. 24: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று  பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வேனில் நின்று பேசியதாவது: இந்திய அளவில் பெண்கள் வாழ உகந்த நகரமாக, கோவை உள்ளது. இந்த மாவட்டத்தில்தான் பொள்ளாச்சியும் அமைந்துள்ளது. எங்கள் அரசு பெண்களை காக்கும் அருணாக உள்ளது. யார் தவறு செய்தாலும் சட்டத்தின்  மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலிருந்து கோவை வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டம் நிலுவையில் உள்ளது. கேரள முதல்வரை சந்தித்து அதுகுறித்து பேசப்பட்டுள்ளது. விரைவில் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக உயர்மட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. கொப்பரை விலையை ரூ.150ஆக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  

பொள்ளாச்சியில், தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீரா பானம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு, ஏரி மற்றும் குளங்களை தூர்வார குடிமராமத்து பணிகள் நடந்துள்ளது.   இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முதல்வர்  ஜமீன்ஊத்துக்குளி, வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை நாமு சுங்கத்தில் பேசினார். இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, முன்னாள் அமைச்சர் தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், கோவை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜேம்ஸ்ராஜா, வால்பாறை கோ ஆப் வங்கி தலைவர் அமீது, துணை தலைவர் மயில்கணேஷன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சலாவுதீன், பொன் கணேஷ். ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் பங்கேற்றனர். ஜமீன்ஊத்துக்குளியில் நடந்த பிரசார கூட்டத்தில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி முருகன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் நரிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்