ஊட்டி, ஜன. 24: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் 30 அரசு குழந்தைகள் இல்லங்களில் நிறுத்தி வைக்கப்படும் குழந்தைகளுக்கு, ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உதகமண்டலம், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 பணியிடம் (ஒருவர் பெண் நபராக இருக்க வேண்டும்) மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள், அவர்களின் விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளிநகலுடன் பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும், தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களைக் கொண்டு தேர்வு குழு மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் (இரு நாட்களுக்கு ஒரு முறை வீதம்) சேவை வழங்க நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட மதிப்பூதியம் ரூ.1000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்காணிப்பாளர், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம், ஸ்டோன் அவுஸ், மதுவானா கோத்தகிரி சாலை, ஊட்டி 643 002. என்ற முகவரியில் அல்லது 99430 36854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.