திங்கள்சந்தை, ஜன.24: இரணியல் அருகே மொட்டவிளையில் கிணறு மாயமாகிய விவகாரம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணையை தொடங்கி உள்ளார். இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மொட்டவிளை பகுதியை சேர்ந்த ஊர் தலைவர் செல்லத்துரை, இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கல்குளம் வட்டம் குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கட்டிமாங்கோடு ஊராட்சியின் 10 வது வார்டுக்குட்பட்ட மொட்டவிளையில், பஞ்சாயத்து நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறை கடந்த 31.12.2020 முதல் காண வில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். வடிவேல் பட பாணியில் கிணற்றை காணோம் என புகார் அளித்து, ரசீதும் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயஜீ புகார்தாரருக்கும், ஆக்ரமித்துள்ளதாக கூறப்படும் நபருக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு சொந்தமான கிணறு சுமார் 60 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் அனுமதியின்றி கிணற்றை மூடியது சட்டவிரோதமான செயல். இது கண்டிக்கத்தக்கது. கிணறு அமைந்துள்ள இடம் தங்களுக்கு உரியது என்றால், தகுந்த ஆதாரங்களுடன் 3 நாட்களுக்குள் நேரில் சந்தித்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் புகார்தாரருக்கும்,அவர் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்