×

நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு

நாமக்கல், ஜன.24: நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, பஞ்சாயத்து தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆட்டு கொட்டாய், மாட்டு தொழுவம் ₹2 லட்சத்தில் கட்டி கொடுக்கும் திட்டம், பிடிஓ அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் அருகே திண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, மகளிர் சங்கம், நிர்வாகம் மூலம், தகுதியான 15 பேரின் பட்டியலை தயார் செய்து, நாமக்கல் பிடிஓ அலுலவகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் ஒருவர் கூட இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து பெயர் அனுப்பப்படாத ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு சொந்தமாக ஆடுகளோ, ஆட்டுகொட்டாய் கட்ட இடமோ இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, இது பற்றி பிடிஓ அலுவலகம் சென்று விபரம் கேட்ட போது, அங்குள்ள அலுவலர்கள் சரியான பதில் சொல்லவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி கூறுகையில், ‘ஊராட்சி மன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட 15 பேரில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. நல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த காமாட்சி, சீரங்கன் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிடிஓ அலுவலகத்தில் இருந்து கடிதம் வருகிறது. ஆனால், அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. அவர்களுக்கு சொந்தமாக ஆடுகளோ, கொட்டாய் அமைக்க இடமோ இல்லை. பஞ்சாயத்தில் இருந்து அனுப்பாத நபரின் பெயர், திட்டத்தில் சேர்க்கப்பட்டது எப்படி என தெரியவில்லை. இது பற்றி பிடிஓ, இன்ஜினியர், பணி மேற்பார்வையாளர் என பலரிடம் கேட்டும் பதில் இல்லை. பயனாளிக்கே தெரியமல் அவரது பெயரில், ஆட்டுகொட்டாய் கட்டியதாக கணக்கு காட்டி, பணத்தை மோசடி செய்யும் நோக்கில் பிடிஓ அலுவலக அலுவலர்கள் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு