×

சேலம் மாணவருக்கு கொரோனா: கோவை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

கோவை, ஜன.22: சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது, தினமும் 70-க்கும் குறைவான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணிவது, கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், பள்ளி வளாகம், வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட பள்ளிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறையினர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? எனவும், உடல் வெப்பநிலை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர்.  

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் வகுப்பறைகளிலும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதனை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் தென்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்களுக்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்யப்படுகிறது. இதில், கொரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்படும். தற்போது வரை எந்த மாணவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கிரீனிங் டெஸ்ட் பணிகளில் பள்ளியின் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Corona ,student ,corona test ,Salem ,school students ,Coimbatore ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...