×

சபரிமலை தங்கம் திருட்டு தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் கைது: கைதானவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கைது செய்தது. இதைத்தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கம் திருடிய வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை இந்த வழக்கில் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தான் சபரிமலையில் இருந்து கதவு, நிலை ஆகியவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் செம்புத் தகடுகள் என போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது தேவசம் போர்டு தலைவராக இருந்த முன்னாள் சிபிஎம் எம்எல்ஏவான பத்மகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் உறுப்பினர்களாக இருந்த சங்கரதாஸ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மீதும் தங்கம் திருட்டு தொடர்பாக புகார் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி இவர்கள் இருவருக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் உடல்நலக் குறைவு இருப்பதாக கூறி இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தனர். இதற்கிடையே இருவரும் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கைது செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

Tags : Travancore Devaswom Board ,Sabarimala ,Thiruvananthapuram ,Special Investigation Team ,Vijayakumar ,Sabarimala Ayyappa temple… ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...