விருதுநகர், ஜன.22: விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீயணைப்புத்துறைக்கு விபத்து பற்றிய தகவல் தெரிவிக்கும் தொலைபேசி எண் 101 உள்ளது. அத்துடன் தற்போது செல்போன் செயலியான தீ செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
தீ (THEE) செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபத்து மற்றம் இடர்பாடுகளின் போது செயலியில் உதவி (HELP) என்ற இடத்தை தொட்டால் போதும். தகவல் அளிப்பவரின் இருப்பிடம் மூலம் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்.
உடனே அந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து தகவல் வந்த எண்ணிற்கு 5 வினாடிகளில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று, விரைவாக சேவை அளிக்க முடியும். தீ விபத்து மற்றும் இடர்பாடு நடந்த இடத்தை செயலி மூலம் அறிந்து செயல்பட முடியும். இதற்கான மாநிலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களும் 371 டேப்பு (கைக்கணினிகள்) வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 10 தீயணைப்பு நிலையங்களில் 28 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. விருதுநகர் தீயணைப்பு நிலையம் தமிழகத்தின் மாடல் தீயணைப்பு நிலையமாக உள்ளது.
கூடுதலாக திருத்தங்கல், ஏழாயிரம்பண்ணை ஆகிய ஊர்களில் தீயணைப்பு நிலையங்கள் துவக்க கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த 2019ல் 510 சிறு தீவிபத்துகளும், 11 நடுத்த விபத்துகளும், 5 பெரிய விபத்துகளும் என 526 விபத்துகள் நடந்துள்ளன. 2020ல் 954 போன் அழைப்புகளில் 632 சிறுவிபத்துகளும், 16 நடுத்தர விபத்துகளும், 7 பெரிய விபத்துகளும் ஆக 656 விபத்துகள் நடந்துள்ளன. 2019ல் 26 பட்டாசு ஆலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்துள்ளனர். 2020ல் 17 பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்து, 21 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். உடன் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், நிலைய அலுவலர் கண்ணன் உடனிருந்தனர்.