×

களக்காடு, விகேபுரம் பகுதிகளில் மினி கிளினிக் அமைச்சர் ராஜலட்சுமி திறந்துவைத்தார்

களக்காடு,  ஜன. 22:  களக்காடு, விகேபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளை அமைச்சர் ராஜலட்சுமி திறந்துவைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  நெல்லை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத குக்கிராமங்களில் மக்கள் நலன்கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் புதிதாக மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் களக்காடு அருகே இடையன்குளத்தில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நேற்று நடந்தது.  தலைமை வகித்து திறந்துவைத்த அமைச்சர் ராஜலட்சுமி, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் வருவாய் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கி   மக்களின் ஏக்கத்தை போக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இயற்கையில் அவர் ஒரு  விவசாயி. ஒரு விவசாயியே தமிழகத்திற்கு முதல்வராக கிடைத்தது நமக்கு வரமாகும். மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட பல்வேறு  நலத்திட்டங்களை தந்துள்ள அவரது கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.  விழாவில் கலெக்டர்  விஷ்ணு, சுகாதாரப்பணிகளுக்கான துணை இயக்குநர் டாக்டர் வரதராஜன், ரெட்டியார்பட்டி நாராயணன்  எம்.எல்.ஏ, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் களக்காடு  தெற்கு ஜெயராமன், வடக்கு பூவராகவன்,  களக்காடு நகரச் செயலாளர் செல்வராஜ். ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் பாபு, வட்டார  மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி, மாவட்ட பயிற்சி மருத்துவ அதிகாரி  முத்துராமலிங்கம், சிங்கிகுளம் மருத்துவ அதிகாரி கவிதா, சுகாதார  மேற்பார்வையாளர் நம்பிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  முன்னதாக  அமைச்சர்  ராஜலட்சுமி  நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வி.கே.புரம்: இதே போல் விகேபுரம் அருகே கோடாரங்குளம் ஊராட்சிப் பகுதியில்  அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கையும் கலெக்டர் விஷ்ணு தலைமையில் அமைச்சர் ராஜலட்சுமி திறந்துவைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கினார். இந்த மினி கிளினிக்கில் டாக்டர் ரமீஸ்ராஜா, நர்ஸ் ரெஜினா மற்றும் உதவியாளர் ஸ்டெல்லா உள்ளிட்டோர் பணியில் இருப்பர். இவ்வாறு புதிதாக திறக்கப்பட்டுள்ள புதிய மினி கிளினிக்குகள் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாட்களில் தினமும் காலை  8 மணி முதல் 12மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். திறப்பு விழாவில் ஏபிஆர்ஓ மகாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயபாலாஜி, துணைச்செயலாளர் பிராங்கிளின், நகரச் செயலாளர்கள் விகேபுரம் கண்ணன், அம்பை அறிவழகன், மணிமுத்தாறு ராமையா, கலை இலக்கியப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர்  மாரிமுத்து, வி.கே.புரம் நகராட்சி துணைத்தலைவர் கணேசபெருமாள், மினி சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட முன்னாள் திட்டக்குழு உறுப்பினர்  பாலகிருஷ்ணன், குஞ்சுபாலு உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Tags : Rajalakshmi ,clinic ,areas ,Kalakkad ,
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்