×

திருவள்ளூர் அருகே நடுரோட்டில் குடிபோதையில் ஹரியான இளம்பெண் ரகளை

திருவள்ளூர்:   ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நிகில் பாண்டே. இவரின் மனைவி நித்து (21). இன்ஜினியர்.  இவர் திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்றார்.  இந்தநிலையில், பயிற்சி நிறைவு விழாவை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து அளிக்க முடிவு செய்தார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் நித்து பங்கேற்றுள்ளார். அங்கு மதுவுடன் விருந்து தடபுடலாக நடந்துள்ளது. நித்துவும் மது அருந்திவிட்டு பொழுதுபோக்கியுள்ளார். இதன்பிறகு குடிபோதையில் தனது ஜீப்பை ஓட்டிக்கொண்டு ஓட்டலில் இருந்து கிளம்பியுள்ளார். போதையில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டிய நித்து திடீரென முன்னாடி சென்ற வேன் மீது மோதிவிட்டார்.  இதில் ஜீப்பும் வேனும் சேதம் அடைந்தது. இதன்பின்னர் ஜீப்பில் இருந்து இறங்கிவந்து சாலையில் நின்று கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டுவந்ததால் பரபரப்பு நிலவியது. வேடிக்கை பார்க்க திரண்ட மக்களையும் நித்து வசைபாடியதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி துரைபாண்டியன், எஸ்ஐக்கள் சங்கர், முருகன் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குடிபோதையில் தள்ளாடியபடி வாக்குவாதம் செய்த நித்துவை அழைத்து சமாதானப்படுத்தினர்.  அப்போது போலீசாரை நோக்கி திரும்பிய நித்து, ‘’ என்னை கைது செய்ய முடியுமா? முடிந்தால் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுங்கள்’ என்று கூறியதுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து போலீசார், நித்துவுடன் கலந்துகொண்ட சிலருக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்ததும் நித்துவை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று போலீசார் கூறி நித்துவை அனுப்பி வைத்தனர்.  ஆனால் அந்த பெண் ஓட்டி வந்த ஜீப்பை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ‘’காவல்நிலையத்துக்கு நித்துவின் பெற்றோர் வந்து விளக்கம் அளித்த பிறகு ஜீப் ஒப்படைக்கப்படும்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Hariyana ,Tiruvallur ,road ,
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது