குமாரபாளையம், ஜன.21: குமாரபாளையம் நகராட்சியில், 20 மற்றும் 24 ஆகிய வார்டுகளில் அமைச்சர் தங்கமணி பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆர்டிஓ மணிராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.பின்னர் மனுக்கள் மீது தீர்வுகாணும் படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இதையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உத்தரவை அமைச்சர் வழங்கினார். பின்னர் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் இரண்டு மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்காக தலா ₹25 ஆயிரத்திற்கான காசோலை, உடல்நலன் குறைந்த இருவருக்கு மருத்துவ சிகிச்சை பெற ₹40 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவிக்கு மடிகணினியும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் தங்கம், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, பொறியாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.