புதுக்கோட்டை, ஜன. 21: புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியை சேர்ந்த முருகேசன் மகன் அய்யப்பன் (34). இவர் கடந்த 18ம் தேதி இரவு ராம் தியேட்டர் கார்னர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அய்யப்பன் கத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். இதனால் 3 பேரும் தப்பியோடி விட்டனர். பின்னர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த அய்யப்பனை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து அய்யப்பனை அரிவாளால் வெட்டிய புதுக்கோட்டை காமராஜபுரம் 20ம் வீதியை சேர்ந்த தாமு (எ) தாமோதரன், ரவுடி மணி (எ) புரோட்டா மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அய்யப்பனை வெட்டியதற்கான காரணம் குறித்து 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.